மாவீரர் நாளின் இன்றையபொருத்தப்பாடு என்ன?

உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த வீரர்களையும் நினைவுகூறும் நாள் மட்டுமல்ல. தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் பற்றி எண்ணி திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த அறைகூவல் விடும் நாளாகும்.

இன்றைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லை. இலங்கையில் ஒரு பெரிய அரசியல் மாற்றம் முள்ளவாய்க்கால் பேரழிவுக்குப் பின் அரங்கேறியிருக்கிறது.

தமிழ் மக்கள் தங்கள் இருப்புக்காகவும் வாழ்விற்காகவும் போராட வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கருவிப் போராட்ட பின்னடைவுக்குப் பிறகு தமிழ் மக்களின் அரசியல் விருப்பங்களைச் சனநாயக வெளியில் இயங்கி மக்களை அமைப்பாக்கும் ஓர் அரசியல் இயக்கம் தமிழ் மக்களிடம் இருந்து உருவாகவில்லை.

மாறி வரும் உலக அரசியல் நிலைமைகள் வட்டார நிலைமைகளைக் கணித்து மக்களும் உலகமும் ஏற்கும் ஓர் அரசியல் தீர்வை முன்வைக்கும் நிலையில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் இயக்கங்கள் இல்லை.

தமிழ்நாட்டிலும் இலங்கையின் நிகழ்கால அரசியல் நிலைமைகளில் இருந்து அல்லாமல் கனவுலகில் தமிழீழ விடுதலையை வலியுறுத்தும் அமைப்புகளும் வி.புலிகளின் போர் சாகசங்களைக் கட்டிப் புல்லரிப்பூட்டும் அமைப்புகளும் தான் உள்ளனவே தவிர அவர்களின் மெய்யான அரசியல் தேவைகளை வலியுறுத்துவனவாக அவை இல்லை.

மாறியிருக்கும் இலங்கையின் அரசியல் சமூகப் பொருளியல் நிலையில் தமிழீழம் எனும் தனிநாட்டு அரசியல் கோரிக்கைக்கு புறநிலைமை இசைவாக இல்லை.

இலங்கையின் ஒற்றைத்துவ அரசியல் சட்டத்தை ஒரு கூட்டாட்சி அரசியல் அமைப்பாக மாற்றும் போராட்டமே இன்றைக்கு உடனடிக் கடமை.
வி.பு வலுவாக அருந்த காலத்தில் செப்-11 தாக்குதலுக்குப் பிந்தைய உலக நிலைமைகளை ஆராய்ந்து இலங்கைக்குள்ளே ஒரு உள்ளக தன்னாட்சியை முன்வைக்கும் சர்வதேச ஆவணத்தை முன்வைத்தனர்.

அத்தகைய உள்ளகத் தன்னாட்சிக்கான அரசியல் நிலைமகளே தற்காலத்தில் உள்ளது. தமிழர்களின் ஞாயமான சமத்துவக் கோரிக்கையை சிங்கள மக்கள் ஏற்கும் வகையிலும் உள்ளும் புறமும் ஓர் அரசியல் இயக்கம் தமிழீழத்தில் உடனடித் தேவை.

பண்டைய பெருமைகளுக்கும் , சாகசக் கதைகளுக்கும் அரசியல் உலகில் எத்தகைய மதிப்பும் இல்லை. அது மக்கள் பங்கேற்புடன் நடத்த வேண்டிய ஒரு செயல்நடவடிக்கை.

இதனைப் புரிந்து வட்டகை உலக சக்திகளை தமிழ் மக்களின் அரசியல் சிக்கலுக்குத் தீர்வுகாண பணிய வைப்பதே தமிழ்நாட்டு மக்களுடைய கடமை.

இலங்கையில் தமிழர்கள் சம உரிமை கொண்ட மக்களாக சமத்துவத்துடன் வாழ தமிழ் உலகம் மாவீரர் நாளில் உறுதியேற்போம்!

இந்த அரசியல் வெளிச்சத்தில்
தமிழீழ விடுதலைக்குத் தங்கள் உடல் பொருள் , ஆவி அனைத்தையும் இழந்த மாவீரர்களை நினைவுகூறுவோம்!

குமரன் [அரசியல் செயற்பாட்டாளர்].

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *